search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் விபத்து"

    கோவையில் 6 பேரை பலி கொண்ட விபத்தில் ‘ஆடி’ கார் டிரைவரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த ‘ஆடி’ கார் கூட்டத்தில் புகுந்து, 6 பேர் உயிரை பலி வாங்கியது.

    சுந்தராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி (வயது 18), பூ வியாபாரி அம்சவேணி(34), ரே‌ஷன் கடைக்கு சென்ற குப்பாத்தாள் (70), ருக்மணி (65), ஓய்வு பெற்ற தபால்காரர் நாராயணன்(70), லோடுமேன் ஸ்ரீரங்கதாஸ் ஸ்ரீரங்கதாஸ் (69) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இவர்களில் ருக்மணி தவிர மற்ற 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ருக்மணி உடல் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த சுந்தராபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்(55), சுரேஷ்(45), நடராஜ் (75) ஆகிய 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கார் டிரைவரான குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீஷ்குமார்(35) என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது இவர் ஓட்டி வந்த கார் கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியின் தாளாளர் மதன்செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் டிரைவர் ஜெகதீஷ்குமார் பெங்களுருக்கு காரில் கல்லூரி நிர்வாகிகள் சிலரை ஏற்றி சென்றுள்ளார்.

    விடிய, விடிய தூங்காமல் கார் ஓட்டிய அவர் நேற்று காலையிலும் கல்லூரி நிர்வாகிகள் சிலரை அழைத்து வர கோவைக்கு வந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

    6 பேர் உயிரை பலிவாங்கிய இந்த கார் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். புதுச்சேரி பதிவு எண் கொண்ட இந்த காரை கோவையில் ஓட்டி வந்துள்ளனர்.

    டிரைவர் ஜெகதீஷ்குமார் குடிபோதையில் இருந்தாரா? என்பதை கண்டு பிடிக்க ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இன்று தெரிய வரும். இதற்கிடையே, டிரைவர் ஜெகதீஷ்குமாரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தினர். ஜெகதீஷ்குமாரை வருகிற 14-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெகதீஷ்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்திப்பு பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை, டிரைவர் ஜெகதீஷ் குமார் ஓட்டி வந்துள்ளார். அவரது டிரைவிங் லைசென்சு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி சாலையில் ஏற்கனவே தனியார் பஸ்கள் அதிவேகத்தில் சென்று விபத்துகள் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இந்தநிலையில் அதிவேகமாக வந்த கார் 6 பேர் உயிரை பலி கொண்டுள்ளது.

    இதையடுத்து பொள்ளாச்சி சாலையில் விபத்துக்களை தடுக்க போலீசார் முக்கிய இடங்களில் பேரி கார்டுகள் அமைத்தனர். சில இடங்களில் வேகத்தடை அமைக்க உள்ளனர். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் லைசென்சு ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    கோவையில் நடந்த விபத்தின் போது சற்று தூரத்தில் நின்று மனைவியுடன் செல்போனில் பேசியதால் தான் உயிர் தப்பியதாக ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி 8 பேர் பலியானார்கள். கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த ஆட்டோவின் உரிமையாளர் சுந்தராபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆவார். இவர் விபத்தை நேரில் பார்த்தவர். இது குறித்து அவர் கூறியதாவது-

    விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் நான் எனது ஆட்டோவில் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் எனது மனைவி செல்போனில் அழைத்தார்.

    இதனால் நான் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து சற்று தூரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தேன். எனது நண்பர் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்தார்.

    அந்த சமயத்தில் தான் சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி விட்டு எனது ஆட்டோவிலும் மோதியது. சத்தம் கேட்டு நான் அங்கு விரைந்து சென்றேன். அதிர்ஷ்டவசமாக எனது நண்பர் காயம் இன்றி தப்பினார்.



    நான் எனது மனைவியுடன் செல்போனில் பேசியதால் உயிர் தப்பினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணிகள் மற்றும் ஆட்டோ மீது மோதி சொகுசு கார் அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மின்கம்பம் உடைந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பொக்லின் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. #tamilnews
    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    குனியமுத்தூர்:

    கோவையில் இன்று காலை பயணிகள் கூட்டத்தில் சொகுசு கார் புகுந்து 6 பேர் பலியானார்கள். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-

    கோவை- பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை அருகில் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆண்கள், பெண்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பஸ்சுக்கு காத்திருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி பகுதியில் இருந்து கோவை நோக்கி அதி வேகமாக ஒரு ஆடி கார் வந்தது. இந்த கார் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

    இதனால் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் 10-க்கும் மேற்பட்டோரை தள்ளி கொண்டு சென்ற கார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ மீது மோதியது.

    பின்னர் அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இந்த சம்பவத்தை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி சென்றனர். அதற்குள் கார் மோதி 4 பெண்கள் 2 ஆண்கள் என 6 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்து விட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    பலியானவர்களில் 5 பேர் பெயர் விவரம் கிடைத்துள்ளது. அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த அம்சவேணி (35), சுபாசினி(18), குப்பாத்தாள் (70), குறிச்சி ஸ்ரீரெங்கதாஸ்(60), குறிச்சி பாலாஜி வீதி நாராயணன் (70) என்பது தெரிய வந்தது.

    இவர்களில் சுபாசினி கல்லூரி மாணவி ஆவார். கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று கல்லூரி செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது விபத்தில் சிக்கி பலியானார்.

    பலியான அம்சவேணி இந்த பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார். கார் மோதிய போது இவரது கடையும் இடித்து தள்ளப்பட்டது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அம்சவேணி இறந்து விட்டார்.

    சுப்பாத்தாள் இன்று காலை ரேசன் கடைக்கு வந்த போது பலியானார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    பலியான பெண் ஒருவர் பெயர் விவரம் உடனடியாக கிடைக்கவில்லை. அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தது குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீசன் (35) ஆவார். அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை கோவையில் இருந்து ஒருவரை அழைத்து வர வந்த போது தான் விபத்தை ஏற்படுத்தி விட்டார். கார் விபத்தில் சிக்கியதும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் டிரைவர் மது போதையில் இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் லட்சுமி, போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    விபத்து காரணமாக கோவை- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதனை சரி செய்தனர். விபத்து குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சுந்தராபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×